/indian-express-tamil/media/media_files/2025/09/12/tvk-vijay-campaign-trichy-ariyalur-perambalur-executive-announcement-tamil-news-2025-09-12-19-22-42.jpg)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், நாமக்கலில் இருந்து கரூருக்கு பரப்புரைக்காக விஜய் தனது பிரச்சார வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கரூர் மாவட்ட எல்லையான தளவாபாளையம் பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இளைஞர்களால், கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி அருகே விபத்து ஏற்பட்டது.
அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இருவர், விஜய் பிரச்சார வாகனத்தின் பக்கவாட்டில் இடித்துக் கீழே விழுந்தனர். லேசான காயத்துடன் அவர்கள் உயிர் தப்பிய இந்த விபத்துக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, "விஜய்யின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில், விஜய் பிரச்சார வாகனத்தின் ஓட்டுநர், இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.