அதிமுக ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ. 314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துக்கு என்று தனியாக பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 % பேருந்துகள் கிளாம்பாக்கதுக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். “ கிளம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தளவில் உட்கட்டமைப்பு பணிகள் முழுதும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இது பயன்பாட்டிற்கு வந்தபின் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பருவமழை காலங்களில் தண்ணீர் வடியும் வகையிலான மழை நீர் வடிகால்கள் , அதிகளவு கூட்டம் சேருகின்ற நிலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல் துறை அலுவலகங்கள், மாற்று பாதைகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே. சாலை முதல் ஊரம்பாக்கம்- நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் , வனத்துறையிடம் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை அமைத்திட கடந்த ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்பு மக்களுக்கு எந்தவிதத்திலும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.