/tamil-ie/media/media_files/uploads/2017/05/cook-4.png)
ஜெயலலிதா மறைந்த பின்னர் பல்வேறு மர்ம சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் சமையல்காரராக இருந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக பணியாற்றியவர். இவரது மகன் ப.முருகேசன் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக உள்ளார்.
ஜெயலலிதாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் சமையல்காரர் பஞ்சவர்ணம். இவரது பேரனுக்கு பெயர் சூட்டியதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான்.
இன்று காலை பஞ்சவர்ணம் நடைபயிற்சி செய்து விட்டு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது மகன் முருகேசன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. திடீரென நிகழ்ந்த கொலைவெறி தாக்குதலில் பஞ்சவர்ணம் நிலைகுலைந்து போனார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் முருகேசன் தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது, அந்த கும்பலைச் சார்ந்த 3 பேர் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இரண்டு பேர் பஞ்சவர்ணத்தை சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். பின்னர், 5 பேர் கொண்ட கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பஞ்சவர்ணத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சவர்ணத்தின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் அவரது மகன் முருகேன் புகார் அளித்துள்ளார். சைதாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரராக பணியாற்றிய 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது மர்மமாகவே இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.