கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டின் காவலாளியாக பணியில் இருந்த ஓம் பகதூர் (51) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளியான கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார்.
அங்கு கொள்ளையடிக்கவும் முயற்சியில் இந்த கொலை நடந்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தன. முக்கிய குற்றவாளிகளான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் ஷயான் ஆகியோர் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளில் சிக்கினர். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷயானை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கேரள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதய குமார், ஜின், ஜம்சீர் அலி, மனோஜ், சமி ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில், ஜின் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சதீசன், தீபு, ஜின், மனோஜ், உதயகுமார் ஆகியோர் கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடந்த மாதம் (ஜூலை 2017) 17 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்து தீபு (எ) தினேசன், சதீசன், உதயா (எ) உதய குமார், மனோஜ் (எ) வாளையார் மனோஜ் உள்ளிட்ட 5 பேர் சார்பில் அவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆடகொணர்வு வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் விசாரணை என்ற பெயரில் கோத்தகிரி சோலூர் மட்டம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்தனர் பின்னர் கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சம்மந்தபட்டவர்கள் அனைவரும் ஏழைகள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருபவர்கள் அவர்களின் வருமானத்தை நம்பி தான் நாங்கள் உள்ளேம். குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்று எந்த குற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை.
இது அரசியல்லுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். எனவே குண்டர் சட்டத்தில் கைது செய்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் சக்தார், எம். சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சானது, ஐந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவை ரத்து செய்தது.
இந்த ஐந்து பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்க பிறப்பித்த உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினர் கொடுத்த மனுவை அரசு காலதாமதமாக பரிசீலித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர், எந்திரகதியில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆகவே, இந்த ஐந்து பேர் மீதான குண்டர் தடுப்பு தடை சட்ட உத்தரவை ரத்து செய்கிறோம் என்று நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.