கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் மீனாம்பாள் சாலையில் உள்ள கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில், கடந்த 15-ம் தேதியன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் வெளிப்பகுதியில் தீயை அணைத்த வீரர்கள் ஷட்டரை திறந்து உள்ளே தீயை அணைக்க முயன்ற போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 48 நபர்கள் காயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சமும், சிறப்பு நிகழ்வாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் என்பவர் கடந்த 19-ம் தேதியன்று உயிரிழந்தார். அதற்கு அடுத்தநாள் அதிகாலையில் அபிமன்யூ என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, தீ விபத்துக்குள்ளான கடையின் உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடையின் உரிமையாளர் உயிரிழந்ததையடுத்து, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகிழ்வன் என்பவர் நேற்றும், கண்ணன் என்பவர் இன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.