கோவையில் நீதிபதி கர்ணன் கைது!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோவையில் நீதிபதி கர்ணன் கைது!

கடந்த ஒருமாதகாலமாக போலீசாரால் தேடப்பட்டு வந்த ஓய்வுபெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், கோவையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மலுமிச்சம்பட்டி எனும் பகுதியில் உள்ள விடுதியில் இருந்து அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, சி எஸ் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்து, அது தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு மனநிலை குறித்து பரிசோதனை நடத்துவதற்காக மருத்துவக் குழுவினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆனால், தான் நல்ல மனநிலையில் தான் இருப்பதாக கூறிய நீதிபதி கர்ணன், மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும், தனக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு, மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என பதில் உத்தரவை பிறப்பித்தார். இந்த பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ். கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும் தன்முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரவைத்தார். தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு, தலா 5 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டணை விதிப்பதாக கர்ணன் உத்தரவிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், நீதிபதிகள் அனைவருக்கும் தலா ரூ.1,00,000 அபராதம் விதிப்பதாகவும், அவ்வாறு செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக நீதிபதி சி எஸ் கர்ணனுக்கு 6-மாத சிறைத் தண்டனை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால், அவரைக் கைது செய்ய, கொல்கத்தா போலீசார் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி சென்னை விரைந்தனர். ஆனால், அன்றே அவர் சேப்பாக்கத்தில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

அப்போதிலிருந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக கர்ணன் எங்கிருக்கிறார் என்று தெரியாமல், போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், நேற்று (திங்கள்) கொச்சியில் இருந்து அவர் கோவை திரும்பியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

நாளை அவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது. கடந்த 12-ஆம் தேதி தான் நீதிபதி பதவியில் இருந்து கர்ணன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: