நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, சி எஸ் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்து, அது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 8-ம் தேதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு மனநிலை குறித்து பரிசோதனை நடத்துவதற்காக மருத்துவக் குழுவினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆனால், தான் நல்ல மனநிலையில் தான் இருப்பதாக கூறிய நீதிபதி கர்ணன், மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மேலும், தனக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு, மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என பதில் உத்தரவை பிறப்பித்தார். இந்த பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ். கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும் தன்முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரவைத்தார். தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு, தலா 5 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டணை விதிப்பதாக கர்ணன் உத்தரவிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், நீதிபதிகள் அனைவருக்கும் தலா ரூ.1,00,000 அபராதம் விதிப்பதாகவும், அவ்வாறு செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக நீதிபதி சி எஸ் கர்ணனுக்கு 6-மாத சிறைத் தண்டனை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை விரைவதாக தகவல் வெளியானது. அவர்களிடம் தான் கர்ணனை கைது செய்வதற்கான ஆணை உள்ளது. எனவே, சென்னை போலீசாரால் கர்ணனை கைது செய்ய முடியாது. இந்தச் சூழ்நிலையில், நீதிபதி கர்ணன் இன்று அதிகாலை காளஹஸ்தி கிளம்பிச் சென்றுவிட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. இன்று மாலை ஐந்து மணியளவில் தான் சென்னை திரும்புவார் என்றும் தெரிகிறது.
அதன்பின்னரே, கொல்கத்தா போலீசாரால் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி கைது செய்யப்படும் பட்சத்தில், இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே பணியில் இருக்கும் நீதிபதி ஒருவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முதன்முறையாக சிறைக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.