புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்த நிலையில், நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு விரைவு ரயிலின் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் தமது சொந்த ஊருக்கு பயணமானார்.
இந்த ரயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மேனகாவை ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கின்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், திருச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்த சந்திர பிரசாத் என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர், மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்ட நிலையில், பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.