DMK secretary Duraimurugan announces KS Radhakrishnan suspended from party Tamil News
KS Radhakrishnan - DMK - Duraimurugan Tamil News: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்தத் தேர்தலில் சசி தரூர், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் வேட்பாளர்களாக களமாடினர். இதில் மல்லிகார்ஜுனா கார்கே அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisment
இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அவரது அந்தப் பதிவில் “மன்மோகன் சிங் 2.0ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்” என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கே தலையை மார்ப் செய்தது போல் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமின்றி திமுகவினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் திமுக தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியாக, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் காமராசர், கலைஞர் கருணாநிதி, போன்ற அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்பு கொண்டவர். அரசியலில் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளராகவும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழக அரசியல் கட்சிகளில் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர். பல்வேறு போராட்டங்களில் இவர் கலந்துகொண்டு சிறைக்கு சென்றவர். 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.