குரங்கணி விபத்து, மனதைப் பிழியும் சோகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
குரங்கணி, தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் அருகேயுள்ள மலைப் பகுதி. இங்கு நேற்று மாலையில் பயங்கர காட்டுத் தீயில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற மாணவிகள் உள்பட 36 பேர் சிக்கினர். அவர்களில் 25 பேர் பலத்த காயங்களுடம் மீட்கப்பட்டனர். மேலும் 11 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.
குரங்கணி தீ விபத்து தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், ‘குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!’ என கூறியிருக்கிறார்.
குரங்கணி என்பதற்கு பதிலாக ‘கருங்குணி’ என கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். தவிர, இறப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரும் முன்பே, ‘மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!’ என கமல்ஹாசன் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னூட்டங்களில் சிலர் சுட்டிக்காட்டியதும், ‘குரங்கணி’ என சிறிது நேரத்தில் கமல்ஹாசன் மாற்றினார்.