தமிழக பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருப்பவர் நயினார் நாகேந்திரன். இவரது மகன் ஸ்ரீநயினார் பாலாஜி தமிழ்நாடு மாநில பா.ஜ.க இளைஞர் அணி துணைத் தலைவாராக உள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாக நிலம் பத்திரப் பதிவு செய்ததாக புகார் செய்யப்பட்ட நிலையில் அவரின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் உள்ள சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நயினார் பாலாஜி மோசடியாக ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்து முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருந்தது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளதாகவும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது.
இந்நிலையில் விசாரணையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது உறுதியான நிலையில் ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
புகார் குறித்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பத்திரப் பதிவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரித்து, ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவுத்துறை தலைவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“