இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி. பெரிய மலைகள், காடுகள், தென்னை மரக் காற்று என தொகுதி முழுவதும் இயற்கை வளம் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பொள்ளாச்சி 21-வது
தொகுதி ஆகும். தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம் என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்ப்போம். பொள்ளாச்சியில் வேளாண் தொழில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தேங்காய் வியாபாரம், இளநீர் வியாபாரம், தேங்காய் நார், பர்னிச்சர் உள்ளிட்ட தொழில்கள் பரவலாக உள்ளன. 7,66,077 ஆண் வாக்காளர்கள், 8,15,428 பெண் வாக்காளர்கள், 290 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,81,795 வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர். பொள்ளாச்சி கொங்கு மண்டலங்களில் முக்கிய தொகுதியாகவே உள்ளது. அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்து வருகிறது.
1951 முதல் இதுவரை 18 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இதில் 1971-ம் ஆண்டு ஒரு முறை இடைத் தேர்தலை சந்தித்துள்ளது. அ.தி.மு.க இங்கு 7 முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க 5 முறை, காங்கிரஸ் 3 முறை,
ம.தி.மு.க 2 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
கிட்டதிட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றது. 1980க்குப் பிறகு கடந்த தேர்தலில் 2019 தேர்தலில் தி.மு.கவின் கு.சண்முக சுந்தரம் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், 5 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளரான சி. மகேந்திரனை 1,75,883 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கிட்டதிட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க கால் பதித்தது. சண்முகசுந்தரம் திமுக பொறியாளர் அணியின் மாநில துணை செயலாளராக உள்ளார். கள அனுபவமும், மக்கள் ஆதரவும் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த முறையும் தி.மு.க அவருக்கு சீட் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தி.முகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இவருக்கும் இங்கு செல்வாக்கு உள்ளது. அதனால் தி.மு.க யாருக்கு வாய்ப்பு வழங்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மறுபுறம் அ.தி.மு.க தனது கோட்டையை மீண்டும் தக்க வைக்க கடும் சவாலை கொடுக்கும். அ.தி.மு.க சார்பில்
அக்கட்சியின் நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த முறை இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பு வழங்கப்படுவில்லை. அதனால் இந்த முறை இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. பா.ஜ.கவில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் போட்டியிடலாம் என தகவல் கூறப்படுகிறது. கட்சி பணிகளைத் தாண்டி பொள்ளாச்சி தொகுதியில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல். எனினும் இன்னும் 1 வாரங்களில் கட்சிகளில் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், பிரச்சாரமும் தொடங்கப்படும். அதுவரையில் சற்று காத்திருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“