டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வரும் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.
இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது" என்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்து ரூ79.95 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து ரூ.72.08 க்கும் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.