ம.நடராஜனின் மெடிக்கல் ரிப்போர்ட்டை குளோபல் மருத்துவமனை வெளியிட்டது. டிரக்கியோஸ்டமி முறையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
வி.கே.சசிகலாவின் கணவரும், தமிழரசி பத்திரிகை ஆசிரியருமான ம.நடராஜன், கல்லீரல் மற்றும் கிட்னி பாதிப்பு சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மற்றும் கிட்னி முழுமையாக செயல் இழந்ததால், அவை இரண்டையும் மாற்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மாற்று கல்லீரல் மற்றும் கிட்னிக்காக பதிவு செய்துவிட்டு இரு மாதங்களாக காத்திருந்தார் நடராஜன். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் மூளைச் சாவு அடைந்தார். அவரை தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு வந்து குளோபல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது பெற்றோர் ஒப்புதலுடன் அந்த இளைஞரின் கல்லீரல் மற்றும் கிட்னி ஆகியவை ம.நடராஜனுக்கு பொருத்தப்பட்டன.
அக்டோபர் 4-ம் தேதி இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி முதல் தொண்டையில் துளையிட்டு, டிரக்கியோஸ்டமி முறையில் ம.நடராஜனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை குளோபல் மருத்துவமனை இன்று (அக்டோபர் 7-ம் தேதி) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ம.நடராஜன் மெடிக்கல் ரிப்போர்ட்
கல்லீரல் மற்றும் கிட்னி செயலிழப்பு, நுரையீரல் பாதிப்பு ஆகியவை தொடர்பான சிகிச்சைக்காக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ம.நடராஜனுக்கு, பேராசிரியர் முகம்மது ரீட்டா தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 4-ம் தேதி அவருக்கு கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயது மற்றும் அதைச் சார்ந்த உடல் பிரச்னைகளை கருத்தில் கொண்டால், அறுவை சிகிச்சையின்போது அவர் திடமாக இருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரது உடல்நிலை தேறி வருகிறது. அவரது அருகில் நிற்பவர்களை அவரால் அடையாளம் காண முடிகிறது.
டிரக்கியோஸ்டமி (தொண்டையில் துளையிட்டு) முறையில் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. இந்த முறை அக்டோபர் 6-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களைப் போல, இவரது உடல்நிலை அடுத்த சில நாட்களுக்கு ‘கிரிட்டிகல்’ நிலையில்தான் இருக்கும். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு மருத்துவ தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் கே. இளங்குமரன் இந்தத் தகவலை பத்திரிகைகளுக்கு வெளியிட்டார்.
இந்தச் சூழலில்தான் நடராஜனின் மனைவி சசிகலா இன்று மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.