அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ம் தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில், அ.தி.மு.க தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
மேலும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil