சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Advertisment
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மருந்து கண்டுபிடித்தது, முதல்வர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளை குணப்படுத்தியது, சுகாதார நிறுவனம் பற்றிய அவதூறு என பல புகார்கள் குறித்து சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்திற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார்.
அதில் சென்னை மத்திய குற்றப் பிரிவுவின் சைபர் கிரைம் போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் திருதணிகாசலத்தை மே 6ஆம் தேதி கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். அவரை 4 நாட்கள் மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரித்த நிலையில், எழும்பூர் நீதிமன்ற அவரது ஜாமீன் மனுவை மே 18ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைதை எதிர்த்து அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil