மதுரை ஆதின மட கோவில்களில் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மதுரை ஆதினமாக தன்னை தானே நித்தியானந்தா அறிவித்துக்கொண்டதற்கு எதிராக ஜெகதலபிரதாபன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கைது நடவடிக்கைக்கு பயந்து மதுரை ஆதினமாக அறிவித்துக்கொண்டதை திரும்ப பெறுவதாக கோர்ட்டில் மதுரை ஆதினம் பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மதுரை ஆதின மடத்திற்குகோ, மடத்திற்கு சொந்தமான கோவில்களுக்கோ நுழைய மாட்டேன் என நித்தியானந்தா எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் வழக்கை முடித்து வைப்பதாக கூறினார். இல்லையென்றால், ஜெகதலபிரதாபன் தாக்கல் செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு அதன் தன்மைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும் என அறிவுறுத்தியிருந்தார்.
நித்தியானந்தா சார்பில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், மதுரை ஆதின மடம், மடத்துக்கு சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதிப்பதாக நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின மடங்களில் முறைகேடுகள் நடந்தால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மடங்களுக்கு வாரிசுகள் நியமிப்பது தொடர்பான வழிமுறைகளை 8 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த உத்தரவு மதுரை ஆதின மடத்தின் வாரிசாக முயன்ற நித்தியானந்தாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.