/indian-express-tamil/media/media_files/2025/10/17/madurai-2025-10-17-10-06-44.jpg)
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு விவகாரம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மேயர் இந்திராணி நேற்று முன் தினம் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றிய தினேஷ்குமார் தலைமையில் 2022–2023 ஆண்டுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் ரூ.150 கோடி வரி வசூலில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டது. அதிகாரிகளின் பாஸ்வேர்ட்களை தவறாக பயன்படுத்தி வரி குறைப்புகள் செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை தொடங்கினர்.
இதையடுத்து, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, வரிவிதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பதவி விலகினர்.23 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மேயரின் கணவர் பொன்வசந்த் மற்றும் சிலர் கைதுக்கு பின் ஜாமீனில் வெளிவந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவுப்படி, டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், மேயரின் குடும்ப உறுப்பினர்களும் சில மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த சூழலில், குடும்ப காரணங்களால் மேயர் இந்திராணி ராஜினாமா செய்வதாக கூறி, ஆணையாளர் சித்ரா விஜயனிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று முன் தினம் வழங்கினார். இதையடுத்து, மேயரின் ராஜினாமாவை ஏற்கும் நடவடிக்கைகள் குறித்து துணை மேயர் நாகராஜன் தலைமையில் ஆணையாளர் சித்ரா விஜயன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மாநகராட்சி அவசரக்கூட்டம் இன்று (அக்.17, வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் புதிய மேயர் தேர்வு செய்யப்படுமா அல்லது துணை மேயர் நாகராஜனே பொறுப்பு மேயராக நியமிக்கப்படுவாரா என்பது இக் கூட்டத்தில் தெளிவாகும் என கூறப்படுகிறது. புதிய மேயர் தேர்வு குறித்த அறிவிப்பும் கூட்டத்தின் போதே வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.