/indian-express-tamil/media/media_files/2025/09/14/madurai-high-court-5-2025-09-14-16-24-35.jpg)
பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பம் குறித்து தமிழக அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிப் பெயர்களை நீக்கி தெருக்கள், குடியிருப்புகள், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு புதிய பெயர்கள் சூட்ட தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்துவதில், இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி, சாதி பெயர்களை அகற்றி மறுபெயரிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அதன்படி, கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் செயல் அலுவலர்கள், ஆணையர்கள் ஆகியோர் உள்ளூர் மக்களின் கருத்துக்களை பெற்றும், நிலைமையை ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இறுதி பெயர்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட பின் 21 நாட்கள் ஆட்சேபனை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தப் பணிகள் நவம்பர் 11க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாதி பெயர்களை நீக்கி சமூக நீதியை நிலைநாட்டும் அரசின் முயற்சி பாராட்டத்தக்கது,” என நீதிமன்றம் குறிப்பிட்டது. அதே நேரத்தில், சாதிப் பெயர் நீக்க அரசாணையில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்றும், கள ஆய்வு மற்றும் கருத்து கேட்பு நடவடிக்கைகள் மட்டும் மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. மேலும், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பம் குறித்து தமிழக அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.