/indian-express-tamil/media/media_files/2025/10/03/madurai-high-court-slams-tvk-party-and-tn-govt-for-karur-stampede-tamil-news-2025-10-03-13-38-33.jpg)
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல், செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று (அக்.3) விசாரணைக்கு வந்தது.
முதலில், கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது நீதிபதிகள் அரசு தரப்புக்கும், த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தரப்புக்கும் அடுக்கக்கான கேள்விகளை எழுப்பினர். "மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்த கடிதம் எங்கே? கூட்டத்தில் குடிநீர், சுகாதார வசதிகள் இருந்தனவா? அவற்றை காவல்துறை கண்காணித்ததா?" என நீதிபதிகள் விரிவாக கேள்வியெழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பு, “அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடைபெறவில்லை. சாலையின் வடபகுதிக்கே அனுமதி அளிக்கப்பட்டது” என தெரிவித்தது. இதையடுத்து, தமிழக அரசும் த.வெ.க-வும் 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரர் பாதிக்கப்பட்டவரா? போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம். ஆனால் முதற்கட்ட விசாரணை நிலையிலேயே சி.பி.ஐ விசாரணை கோரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்” என நீதிபதிகள் கடுமையாகக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பு, “விதிகள் வரையறுக்கப்படும் வரை புதிய கூட்டங்களுக்கு அனுமதி இல்லை” என தெரிவித்தது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், “ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள கட்சிகளின் கூட்டங்களுக்கு தடையில்லை. மேலும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்களுக்கு இனி அனுமதி கிடையாது” எனத் தெளிவுபடுத்தினர்.
மேலும், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொடர்பான மனுக்களும் விசாரணைக்கு வந்தது. இவற்றில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.