13-வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேசிய போது, ‘நாளை காலை 11 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் யாசிம் பேகம் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள். நாளை பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்படும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில்குமரய்யா தொடர்ந்த பொதுநல வழக்கில், போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பணிக்கு திரும்பாத தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.