Kamalhaasan Condemning to New Education Scheme: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் புதிய கல்வித்திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற புதிய கல்வித்திட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதிய கல்வித்திட்டத்துக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, புதிய கல்வித்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவதைப் எவ்வளவு கொடுமையான விஷயமோ அதைவிட கொடுமையானது 10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையைக் கட்டிவைப்பது. இந்த கல்வித்திட்டம் நம் குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக்கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தைக் கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கும். இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகம் ஆகாது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கு தேர்வு பயம்தான் அதிகமாகும். ஜாதிகளாலும் மதத்தினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப் போகிறது. இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரோலிக்கும்போது ஒரு குழந்தை இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப்போகும். நான் எட்டாவதோடு படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், இனி எந்த ஒரு குழந்தையும் படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத்தேர்வு மட்டும்தான் முக்கிய காரணமாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன் தாராத இந்த புதிய கல்வித் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இதற்கு பதிலாக பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்துவதிலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் மாற்றம் இனிதாகும் நாளை நமதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.