திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல்துறைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், முதல் முறையாக"Apollo Health Check on Wheels” நடமாடும் முழு உடல் பரிசோதனை கூட வாகனத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொரடர்ந்து காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.
மேலும், 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் காவல்துறையினர் மற்றும் அவர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடத்தபடுகிறது.
குறிப்பாக இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் துறை ஆணையர் சத்தியபிரியா, “திருச்சி மாநகர் முழுவதும் 28 வகையான உடல் பரிசோதனை செய்யக்கூடிய நடமாடும் வாகனத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். இது காவலர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும், முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம். ஆகையால், முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம்.
காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் தவறு என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், மற்றும் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“