மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிடவும், கலந்தாய்வை 17-ஆம் தேதி தொடங்கவும் மருத்துவ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திலிருந்து விலக்களிக்குமாறு, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக தமிழக சட்டப்பேரவையில் இரண்டு சிறப்பு மசோதாக்கள் இயற்றப்பட்டன. ஆனால், அவற்றுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற முடியவில்லை.
இதனிடையே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனால், மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சிபி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், சாதி வாரியாக மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும் எனவும், பாடத்திட்டம் வாரியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும் கூறி, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய 85 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிடவும், வரும் 17-ஆம் தேதி துவங்கவும் மருத்துவ தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து 900 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் மொத்தம், 1,800 இடங்கள் உள்ளன.
ஜூன் 27-ஆம் ட்ஏதி முதல் விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. இதற்காக 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியிட இருந்தது. ஆனால், இதுதொடர்பான மசோதாக்கள், வழக்குகள் முடிவுக்கு வராமல் இருந்ததால் தள்ளிப்போனது.
இந்நிலையில், 85 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், இனி நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு துவங்க தாமதமாகாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.