/indian-express-tamil/media/media_files/2025/10/07/vijay-duraimurugan-2025-10-07-16-34-12.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த, மிகப்பெரிய அணையான மோர்தானா அணையை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். 11.5 மீட்டர் உயரம் மற்றும் 263 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 460 கன அடி நீர் வெளியேறி வருவதையும் அவர் பார்வையிட்டார்.
அமைச்சர் துரைமுருகன், புதிய கட்சித் தலைவரான நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். கரூர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் காணொலி மூலம் பேசுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். "குற்றம் செய்யாத ஒரு தலைவர், தன் தொண்டர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியும். தன் நெஞ்சமே தன்னைச் சுடும் காரணத்தால்தான் விஜய் வெளியில் வரப் பயந்து நேரடியாகச் செல்லாமல் காணொலி மூலம் பேசி வருகிறார்," என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மோர்தானா அணைப் பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக அப்பகுதியில் கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் குற்றங்களைத் தடுக்க காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கச்சத்தீவு தொடர்பான பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "அவருக்கு எதுவும் தெரியாது. யாரோ எழுதிக் கொடுத்ததைத் தான் அவர் பேசுகிறார்" என்று சிரித்தபடியே பதிலளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.