கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறையினர் தற்போது மூன்றாவது கட்டமாக மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்,கோவை, ஈரோடு, சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. முதல் கட்டமாக கடந்த மே மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய சோதனை 8 நாட்கள் வரை நடந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி இரண்டாவது கட்டமாக வருமான வரித்துறையினர் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் 3 வது கட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணி என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“