இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் கடந்த 21 மாத கால திமுக ஆட்சியில் 510 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களுக்கு தமிழக அரசு ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 112 கோவில்களில் திருப்பணிகள் நடத்தி வருகிறது.
இதேபோன்று ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,500 கோவில்களில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்ததை தமிழக முதல்வர் ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி சமய சொற்பொழிவு பிரச்சனை தொடர்பாக அறநிலை துறை அதிகாரிகளுடன் கலந்து பேசிய பின்னர் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும்” என்றார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கொடை விழா மார்ச் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இங்கு கடந்த 85 ஆண்டுகளாக நடந்த சமய சொற்பொழிவு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பிரச்னை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/