பழனி குடமுழுக்கு நிகழ்வில் கலந்துகொண்டு, இந்து சமயம், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவர், “பழனி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஆன்லைன் புக்கிங் மூலம் 52 ஆயிரம் பேர் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள்.
அதில் 2000 பேருக்கு தான் அனுமதி கொடுக்க முடிந்தது. மேலே 6000 பேர் தான் அமரும் வகையில் உள்ளது. 33 அக்னி குண்டம் அமைக்கப்பட்டு உள்ளது. 13 மேல் மண்டபம் உட்பட அனைத்து பிரகாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் 447 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழில் 108 ஓதுவார்கள் வைத்து வேத மந்திரம், திருமுறை, கந்த சஷ்டி கவசம் ஆகியவை பாடப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தமிழில் குடமுழுக்கு நடத்த நீதி மன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது, அதன்படி குழு அமைக்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல ஆட்சி பொறுப்பேற்ற பின் கோவிலுக்கு சொந்தமான 3.54 லட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி தொடங்கினோம். அந்தப் பணி நடைபெற்று வருகிறது.
கோவில்களுக்கு சொந்தமாக 26 யானைகள் உள்ளது. அந்த யானைகளுக்கு கோவில்களிலேயே குளியல் தொட்டி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யானை புத்துணர்வு முகாம் ஆகவே தேவையற்றதாக உள்ளது. இதுவரை 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. 62 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் அந்தந்த கோவில்களுக்கு சிலைகள் ஒப்படைக்கப்படும்.
சிதம்பரம் கோயிலாக இருந்தாலும் மக்களால் தான் கட்டப்பட்டது. ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் அதற்கு பொறுப்பு. 48,000 கோவில்களில் விலைமதிப்பற்ற செல்வங்கள் உள்ளது. எந்தக் காலத்திலும் உருவாக்க முடியாத கலை பொக்கிஷம் உள்ளது.
இவைகளை பாதுகாக்க முடியும் என்றால் இந்து சமய நிலையத் துறையால் தான் முடியும்.
அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கட்சியில் தேசிய அளவிலே மற்ற மாநிலங்களில் அவர்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன இந்து சமய அறநிலைத்துறை பொறுத்தவரையான விளக்கத்தை தந்து விட்டு இந்த விளக்கத்திற்குள் இந்து சமய அறநிலைத்துறையை குறித்த கருத்தை சொல்வது நன்றாக இருக்கும்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.