உண்மைக்கு மாறாக பேசுவதை தினகரன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் பல தகவல்களை வெளியிட நேரிடும் என அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சி உழவர் சந்தையில் டிடிவி தினகரன் சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய தினகரன், "சமூக நீதியில் இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ஜெயலலிதா தனது கடைசி உயிர் மூச்சு உள்ளவரை நீட் வேண்டாம் என உறுதியுடன் இருந்தார். நீட் தேர்வை மன்மோகன் சிங் அரசாங்கம் அறிவித்த போது, அதனை ஜெயலலிதா எதிர்த்தார். கடைசி வரை நீட் தேர்வு இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். நீட் தேர்வு மட்டுமல்லாமல், 2005-ஆம் ஆண்டில் மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இருந்த நுழைவு தேர்வை ஜெயலலிதா ரத்து செய்தார்.
ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆட்சியாளர்கள் விலக்கு பெறவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறாதது மாணவ-மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியாளர்களின் தவறான வாக்குறுதிகளால் தான் அனிதாவின் மரணம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது துரோகிகளின் கூட்டாட்சி. எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. தேர்தலில் வென்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்வோம் என்றார்.
ஆளுநரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அவர் உத்தரவிட வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
நியாயம் கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொய்யான காரணங்களை கூறி தகுதி நீக்கம் செய்துள்ளனர் என குற்றம் சாட்டிய தினகரன், எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதன்பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், உண்மைக்கு புறம்பாக பேசுவதை தினகரன் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில், தினகரன் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், முதலமைச்சர் மீது இல்லாத ஒரு வழக்கை இருப்பது போன்று தினகரன் அவதூறு பரப்புவதாகவும் உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.