காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்கியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம், திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தொடங்கியது. இந்த நிகழ்வில், அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நடைபயணம் தொடங்குவதற்கு முன்னர், ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய ஸ்டாலின், "இது அரசியலுக்காக நடைபெறும் பயணம் அல்ல. தமிழக உரிமையை மீட்டெடுக்கவே இந்த பயணம். காவிரி உரிமை மீட்பு பயணம் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஏப்.9ஆம் தேதி அரியலூரில் இருந்து 2ஆவது கட்ட பயணம் தொடங்கும். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றவில்லை" என்றார்.
இன்று தஞ்சை வரை செல்லும் இந்த நடைபயணம், நாளை தஞ்சை சூரக்கோட்டையில் இருந்து மீண்டும் பயணத்தை தொடங்கும்.