Advertisment

சிவாஜி சிலை அகற்றம்: ஸ்டாலின் கடும் கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிவாஜி சிலை அகற்றம்: ஸ்டாலின் கடும் கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

கலைத்துறையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் முத்திரை பதித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார். அதனையடுத்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்ற தமிழக அரசு, சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கியது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே, கடந்த 2006-ஆம் முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி, சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்தார்.

இதனையடுத்து, மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, "தமிழக அரசே மணிமண்டபம் கட்டித்தர வேண்டும்" என நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மணி மண்டபம் கட்டும் பணி பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது எனவே அதனை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டது.

இந்தச் சிலையை அங்கிருந்து அகற்றினால், காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க வேண்டுமென சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், சிலையை அகற்றத் தடையில்லை என்று கடந்த ஜூலை 17-ம் தேதியன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் சிவாஜி சிலை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

"எல்லாத் தலைவர்களுக்கும் மணி மண்டபம் தனியாகவும் சிலைகள் தனியாகவும் இருப்பதுபோல, சிவாஜி கணேசனுக்கும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம். கடற்கரையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் இதனை அமைத்திருக்கலாம்" என சிவாஜி சமூக நலப் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின்,"கருணாநிதி வைத்த சிலை என்பதால் சிவாஜி சிலயை தற்போதைய அதிமுக அரசு அகற்றியுள்ளது. சிலையை அகற்றியதன் மூலம் சிவாஜியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment