ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுடன் நடைபெற்ற இந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா உள்பட இருவர் வீரமரணம் அடைந்தனர். இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தைச் சேர்ந்தவர். பெரியசாமி, மீனாட்சி தம்பதியரின் மகனான இளையராஜாவுக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.
இதைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் மிக உன்னதமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் இளையராஜா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இளையராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
தற்போது ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான கண்டனியில், முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.