மாலையில் சந்திப்பு; காலையில் விமர்சனம்: ஆளுநரை வறுத்த ஸ்டாலின்

பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது. சட்டப்பேரவையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல் உள்ள மாநில ஆளுநர் நமக்கு தேவையா?

பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது. சட்டப்பேரவையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல் உள்ள மாநில ஆளுநர் நமக்கு தேவையா?

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி - மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கவுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை விமர்சன அம்புகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையாக தாக்கியுள்ளார்.

Advertisment

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் மூலம் கடந்த மாதம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த திமுக எம்எல்ஏ-க்கள், திமுக எம்.பி.,கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பேரவைக் கொறடா விஜயதாரணி ஆகியோர், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல், திமுக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுமதி கோரியிருந்தார். அதையேற்ற ஆளுநர் அவரை சந்திப்பதற்கு இன்று மாலை நேரம் ஒதுக்கியுள்ளார். அதன்படி, ஆளுநரை ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

இத்தகைய சூழலில், சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசும் போது, ஆளுநர் வித்யாசாகர் ராவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

விழாவில் பேசிய ஸ்டாலின், எப்போது ஆட்சி அகற்றப்படும் என்ற கேள்வியும், தமிழக அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அனைவரிடமும் உள்ளது. பழனிசாமி அரசை மாற்ற வேண்டும் என ஏற்கனவே குடியரசுத் தலைவர் சந்தித்தோம். தேவைப்பாட்டால் மீண்டும் சந்திப்போம். அதேபோல், இன்று மாலையில் ஆளுநரை மீண்டும் சந்திக்கவுள்ளோம். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன் வைப்போம்.

எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை சேர்த்து ஆளுங்கட்சிக்கு எம்எல்ஏ-க்கள் 119 பேரின் எதிர்ப்பு உள்ளது. பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இது தெரிந்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். சட்டப்பேரவையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல் உள்ள மாநில ஆளுநர் நமக்கு தேவையா? என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பேசிய ஸ்டாலின், ஆளுநருக்கு அனைத்தும் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதற்கு மத்திய அரசே காரணம். இந்த பிரச்னையில் திமுக பலனடைந்து விடக் கூடாது என நினைக்கின்றனர். திமுக ஆட்சி அமைந்தால் அதை அசைக்க முடியாது என அவர்களுக்கு தெரியும் என்றும் சாடினார். அதேபோல், சதி செய்து, குறுக்கு வழியில் செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டிய ஸ்டாலின், கொல்லைபுறமாக ஆட்சிக்கு வருவதை திமுக எப்போதும் விரும்பாது எனவும் திமுக-வின் நிலைப்பாட்டை விளக்கினார்.

மாலையில் ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில், ஆளுநரை திமுக செயல் தலைவர் கடுமையாக விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dmk Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: