ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த ஸ்டாலின் கருத்துக்கு, அவர் ஒன்றும் வழக்கறிஞர் இல்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதேபோல், அவரது சொத்து மற்றும் உடமைகளும் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, சாதாரண பொதுஜனங்கள் வரை பலரும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை பார்த்து வந்தனர். அப்போதே, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு எடுத்துக் கொண்டு, நினைவு இல்லமாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். மேலும், தனது தர்மயுத்தத்தை தொடங்கிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இதே கோரிக்கையை விடுத்தார்.
இதனிடையே, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும். அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், ஜெயலலிதாவின் அண்ணன் மக்கள் தீபா உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் இருந்து சென்னை திரும்பிய திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்றார்.
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஸ்டாலின் ஒன்றும் வழக்கறிஞர் இல்லை என்றார்.