திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சனிக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் மற்றும் முரசொலியின் பவளவிழா பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் வெளிநாடு செல்லவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சனிக்கிழமை இரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9:45 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் அவரம் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். சுமார் ஒரு வாரம் லண்டனில் இருக்க மு.க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், 20-ம் தேதி அவர் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக மு.க ஸ்டாலிடம் அதிமுக இரு அணிகளும் இணையவுள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மு.க ஸ்டாலின் கூறும்போது: என்னைப்பொறுத்தவரையில் ஓ.பி.எஸ் ஆக இருந்தாலும் சிரி. ஈ.பி.எஸ்-ஆக இருந்தாலும் சரி, யார் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இன்றைய நிலையில், மக்கள் சந்தித்து வரும் அவதிகளுக்கு ஒரு விடிவுகாலம் வர வெண்டும் என்றால், தற்போதைய நடந்து வரும் ஆட்சியானது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கூறினார்.