உலகில் மிகச்சிறிய செயற்கைக் கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதன்பின் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.
சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த செயற்கைகோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூறும் வகையில் ‘கலாம்சாட்’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இதுபோன்ற சாதனைகள் இன்னும் பெருக வேண்டும்" என வாழ்த்தி குறிப்பிட்டுள்ளார்.