மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரின் நியமனத்தை ரத்து செய்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், தீர்ப்பில் பல்கலைக்கழக சட்டவிதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் நகல் கிடைக்கும் முன், விடுமுறை தினமான ஜூன் 16 ஆம் தேதி பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, துணைவேந்தர் தேர்வுக்குழுவுக்கு சிண்டிகேட் பிரதிநிதியாக பேராசிரியர் தங்கமுத்து நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் தங்கமுத்து நியமனத்துக்கு தடைகோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
அதில் விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக குழுவின் உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டுள்ளதாகவும் ஏற்கனவே விதிமீறல் இருந்தால் தான் துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே பேராசிரியர் தங்கமுத்து நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்க சிவன், சட்டவிதிகளை பின்பற்றாமல், அவசர கதியில் சிண்டிகேட் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மீண்டும் தகுதியில்லாதவரே துணைவேந்தராக தேர்வு செய்யக் கூடிய அபாயம் இருப்பதாகவும் வாதிடப்பட்டார்.
இதையடுத்து, தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.