எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்த சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.
எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் தற்போது ரூ 55,000 ஆகும். அதனை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு மசோதாவை இந்த கூட்டத் தொடரின் 3-வது நாளான இன்று (10-ம் தேதி) அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேறினால் எம்.எல்.ஏ.க்களுக்கு இரு மடங்கு சம்பளம் கிடைக்கும்.
எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். இன்று குட்கா விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடி வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் உயர்த்தினால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள். எனவே சம்பள உயர்வை நாங்கள் எதிர்க்கிறோம்.’ என்றார். திமுக எதிர்த்தாலும்கூட பேரவையில் அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாகவே நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.