இன்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, ரூபாய் 6 ஆயிரத்து 4025 கோடி மதிப்பீட்டில், இருவழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் மோனோ ரயில் திட்டமாகும். இதன் முதல் அறிவிப்பு 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், 'மொத்தம் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 18 வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.
போரூர்-கத்திப்பாரா, போரூர்-வடபழனி இடையேயான 20.68 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,267 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்வழித்தடமும், வண்டலூர் முதல் வேளச்சேரி இடையேயான 22.80 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,135 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படும் எனவும் தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து மோனோ ரயில் திட்டத்திற்கு பதிலாக மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது. மோனோ ரயில் திட்டம், வெளிநாடுகளில் தோல்வி அடைந்த ஒரு திட்டம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2009ல் ஒப்புதல் பெறப்பட்டு, 2015ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
மீண்டும், 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக தோல்வியடைந்து, அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தும் அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். அதன்பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த ஆண்டு 2016 ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியான அதே திட்டத்தை அன்று வெளியிட்டார்.
அதன் பின், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் மோனோ ரயில் திட்டம் குறித்து, கொள்கை விளக்கக் குறிப்பொன்றைத் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், சென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி ரூபாய் செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும், பொதுப் போக்குவரத்தை உயர்த்த, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில், 43.48 கி.மீட்டருக்கு இரு வழித்தடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் வழித்தடம் பூந்தமல்லி- கத்திரப்பாரா, போரூர்- வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும், 2-வது வழித்தடம் வண்டலூர்- வேளச்சேரி இடையே ரூ.3,135 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.