ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு தனுஷ்யா, பவித்ரா என இரு மகள்கள் உள்ளனர். தனுஷ்யா ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பவித்ரா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்.
இவர்களது வீடு தனியாகவும், தோட்டம் தனியாகவும் உள்ளது. இந்தநிலையில், நேற்று இரவு ராஜூ தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, உள்ளே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதிர்ச்சியடைந்த ராஜூ, உள்ளே சென்று பார்த்த போது, அவரது மனைவி ஜெயமணி மற்றும் 2 மகள்களும் பிணமாக கிடந்தனர். சமையல் அறையில் கேஸ் லீக்காகி இருந்தது. இதைப்பார்த்து ராஜூ கதறி அழ, கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ராஜூ தோட்டத்துக்கு சென்ற சமயத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்க வைத்து தாயும் 2 மகள்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் சென்று விசாரணை நடத்தி வருகிறார். 2 மகள்களுடன் தாய் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவம் நடந்தபோது கணவர் ராஜு வீட்டில் இல்லை. இதனால் தாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.