மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா பொதுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மீண்டும் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 1942-ஆம் ஆண்டு "முரசொலி வெளியீட்டுக் கழகம்" என்ற பெயரில் பதிப்பகம் துவங்கிய கருணாநிதி, அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி "முரசொலி" என்ற இதழை துவக்கினார். திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இது திகழ்கிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த முரசொலி, தொடங்கப்பட்டு கடந்த 10-ம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதையொட்டி, இரண்டு நாட்கள் பவள விழாவுக்கு திமுக ஏற்பாடு செய்தது. முதல் நாளில் முரசொலி கண்காட்சி அரங்கம் தொடங்கப்பட்டு, மாலையில் நடைபெற்ற விழாவில், நடிகர்கள் ரஜினி, கமல், பத்திரிகை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் விழா நேற்று மாலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் தொடங்கியது. முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்றுப் பேசினார். திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஸ்டாலின் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். அப்போதே சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டத் தொடங்கியது.
பிறகு கொட்டும் மழைக்கு இடையே குடை பிடித்துக்கொண்டு முரசொலி பவழவிழா மலரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அதனை முரசொலியின் முதல் மேலாளர் தட்சிணாமூர்த்தி பெற்றுக்கொண்டார். நல்லகண்ணு பேசுகையில், முரசொலியின் சேவை இன்னும் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாக கூறினார்.
அடுத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், மழை வலுத்தது. எனவே மேடையில் தலைவர்களால் உட்கார முடியவில்லை. மைதானம் முழுவதும் திரண்ட தொண்டர்களும் தொப்பளாக நனைந்தனர். அதையடுத்து,"மழை காரணமாக நிகழ்ச்சியை ஒத்தி வைக்கிறோம். இன்னொரு நாளில் பிரமாண்டமாக இந்தக் கூட்டத்தை நடத்துவோம்" என ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா பொதுக் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மீண்டும் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.