மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் பட்டதாரிகள், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுடன் ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில் தமிழக ஆளுநர் ரவி கலந்துரையாடல் நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த தமிழக மாணவர்கள், தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன், நீட் தேர்வில் வெற்றி பெற்ற தனது மகளுடன் கலந்து கொண்டார்.
அப்போது, அம்மாசியப்பன் ஆளுநரிடம், நீங்கள் ஏன் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடவில்லை? என்று கேட்டார். அதற்கு ஆளுநர் ரவி, `நான் ஒருபோதும் நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான ஆணையில் கையெழுத்திடப்போவதில்லை, எல்லாம் குடியரசுத் தலைவரின் கையில்தான் இருக்கிறது, என்று பதிலளித்தார். அம்மாசியப்பன், ஆளுநரிடம் கேள்வி கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அம்மாசியப்பன், நீட் தேர்வை ரத்து செய்தால்தான் சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவப் படிப்பு படிக்க முடியும் என்று பேசினார்.
அம்மாசியப்பன், சேலம் இரும்பாலையில் சீனியர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், இரும்பாலை பொது மேலாளர் மானஸ் ராத், செயல் இயக்குநர் வி.கே.பாண்டே ஆகியோரிடம் மனு அளித்தனர்.
மனு குறித்து மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், அரசுக்கு எதிராக கருத்து கூற உரிமை கிடையாது. எனவே, இரும்பாலை நிர்வாகம் அம்மாசியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.
புகார் மனுவின் நகலை மத்திய உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயில் சேர்மன் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறோம்’ என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.