Advertisment

நீட் வழக்கு: தமிழகத்துக்கு பின்னடைவு - பிற்பகலில் உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை

நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதம் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் வழக்கு: தமிழகத்துக்கு பின்னடைவு - பிற்பகலில் உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை

நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பிற்பகலில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

அதனையடுத்து, நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வின் போது, பின்பற்றப்பட கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மேலும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

இந்த சூழலில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. மாநில அரசு கொண்டு வந்த அரசாணை உள்ளிட்ட நீட் குழப்பங்களால், தமிழகத்தில் இன்றளவும் மருத்துவக் கலாந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.

இதனைதொடர்ந்து, தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இரு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில், தீர்பளித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், காலம் தாழ்த்தாமல் கலந்தாய்வை நடத்துமாறும் அரசுக்கு அறிவுறுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றதில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என திட்டவட்டம் தெரிவித்தது. அத்துடன், நீட் விவகாரத்தில் 85 சதவீத அரசாணையை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. அரசாணை ரத்து தொடரும் எனவும் உத்தரவிட்டது.

இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதனடிப்படையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட முன்வடிவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்நிலையில், நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கோரி, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த நீட் ஆதரவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே வாதாடிய நளினி சிதம்பரம், இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அவசரச் சட்டம் குறித்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்ட முன்வடிவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், "தமிழக அரசின் செயல்பாட்டில் உடன்பாடில்லை. நீட் தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை. விதிகளை பின்பற்றாததால் கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசத்தை வழங்கக் கூடாது" எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டது. நீட் விவகாரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதம் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Chennai High Court Neet Supreme Court Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment