Neet exam today tn neet exam : மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,842 தேர்வு மையங்களில் இன்று (13/09/2020) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதவுள்ள நீட் தேர்வு பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 14 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வை 1,17,990 பேர் எழுதவுள்ளனர். மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வுக்கு காலை 11.00 மணிக்கே தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் இருக்க வேண்டும்.
ஒரு அறைக்கு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்றினால் பின்பற்றப்படும் சமூக விலகல் விதிகள் காரணமாக 24-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டில், கொரோனா நடைமுறைகளைப் பற்றி குறிக்கப்பட்டிருக்கும். தேர்வு அறைக்குள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருட்கள் குறித்து அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 11 மணி முதல் 11.30 மணிவரை, மாறுபட்ட ஸ்லாட் நேரப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில், 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 1.17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதில், ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிகிறது.முந்தைய ஆண்டுகளில் ஒரு தேர்வறையில், 24 மாணவ - மாணவியர் தேர்வெழுத அனுமதி வழங்கப் பட்டிருந்தது
தேர்வு மையத்துக்கு வரும் போது, கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை சானிடைசரால் துடைத்த பின், தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்.தேர்வு மையத்துக்குள் செல்லும் போது, மாணவ - மாணவியரின் உடல் வெப்பநிலை, தானியங்கி கருவியால் பரிசோதிக்கப்படும். சராசரி வெப்பநிலையை விட அதிகமாக உள்ள மாணவ - மாணவி யரை, தனி அறையில் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:
அரியலூர் அனிதா தொடங்கி மதுரை ஜோதிஸ்ரீ துர்கா வரையிலான தற்கொலைகள் பரிதவிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார். இரண்டு அரசாங்கங்களாலும் வளர்க்கப்பட்ட இந்த நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும், அவர்கள் மருத்துவம் படிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும் கூறியுள்ளார். அதற்காக எந்தவிதமான சட்டப்போராட்டத்தையும், ஆட்சிப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil