மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுததியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 8-வது நாளாக கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றும் போராட்டம் தொடர்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுபெற்று வருவதன் காரணமாக சென்னை புதுக்கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/New-Colllege.jpeg)
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று 7-வது நாளாக கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டும், நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தியும் இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஈடுபட்டனர்.
இதேபோல, சென்னை பெரம்பூரில் அரசு பள்ளி மாணவிகள் 500-க்கும் மேற்படோர் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், தொடர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் ஏற்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/NEET-2-salem.jpg)
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியனர் கைது
சென்னை பெரம்பூரில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, கோவையிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்னதர். ./tamil-ie/media/media_files/uploads/2017/09/NEET-Protest-Srivilliputhur.jpg)