சென்னை மாநகர போக்குவரத்து கழகம், புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள சிகப்பு நிற பேருந்துகள், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை அளித்துவருகின்றன.
மற்ற டீலக்ஸ் சர்வீஸ் பஸ்களை காட்டிலும், இந்த சிகப்பு நிற எக்ஸ்பிரஸ் பஸ்களில் கட்டணம் 35 முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது. டீலக்ஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 ஆக உள்ள நிலையில், எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.9 என்ற அளவிலேயே உள்ளது.
முதல்வர் பழனிசாமி, கடந்த புதன்கிழமை, தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 154 கோடி மதிப்பீட்டிலான 500 புதிய பஸ்களின் சேவையை துவக்கி வைத்தார். இந்த 500 பஸ்களில், 235 பஸ்கள், சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 235 பஸ்களில் 79 பஸ்கள் எக்ஸ்பிரஸ் சேவைகளாகவும், எஞ்சிய பஸ்கள், டீலக்ஸ் சேவைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள், சென்னையில் 51 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. சென்னை மக்களின் கோரிக்கைக்கு இணங்க, மக்கள் பயன்பாடு அதிகமுள்ள வழித்தடங்களில், இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
தியாகராய நகர் - செங்கல்பட்டு, திருவான்மியூர் - அய்யப்பன்தாங்கல், திரு.வி.க. நகர் - கோயம்பேடு, திருவான்மியூர் - தாம்பரம் கிழக்கு , அடையார் - தாம்பரம் மேற்கு, சென்ட்ரல் - கேளம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.