கால்நடைக்கான வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வர்த்தக நோக்கில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து மத்திய அரசு கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் இந்த உத்தரவிற்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில், மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. தமிழகத்திலும், பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவர், மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று வழக்கு தொடர்ந்தார். அம்மனுவில், 'உணவு என்பது தனிமனித உரிமை சார்ந்த விஷயம். அதில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்கு மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த நான்கு வாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.