பள்ளித் தேர்வுகளுக்கு வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பெண் வழங்கும் முறைக்கு புதிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறை தொடர்பான அரசாணை, பொது நுழைவுத்தேர்வுக்கான வினாக்கள் அடங்கிய குறுந்தகடு ஆகியவற்றை ஆகஸ்ட் 18-ம் தேதி கோட்டையில் வெளியிட்டார். அதை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் பெற்றுக்கொண்டார்.
வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு முறை தொடர்பான அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது.. மாணவர்களின் அக மதிப்பீட்டுக்காக மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது. அதாவது வருகை பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும், உள்நிலை தேர்வுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்களும், ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் போன்றவற்றுக்காக அதிகபட்சம் 2 மதிப்பெண்களும் அளிக்கப்பட உள்ளது.
வருகை பதிவை பொறுத்தமட்டில் 85 சதவீதத்துக்கு மேல் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண், 80 முதல் 85 சதவீதம் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு 2 மதிப்பெண், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. உள்நிலை தேர்வை பொறுத்தமட்டில் பள்ளியில் நடத்தப்படும் சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. தொழிற்கல்வி செய்முறை பாடத்தை தவிர்த்து அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீடு மேற்கண்ட முறையில் கணக்கிடப்பட உள்ளது.
தொழிற்கல்வி செய்முறை பாடத்தை பொறுத்தமட்டில் அக மதிப்பீட்டுக்கு 25 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு 75 மதிப்பெண் வழங்கப்படும். செய்முறை அல்லாத பொதுப்பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். செய்முறை உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்ணுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு அளிக்கப்படும்.
தொழிற்கல்வி அல்லாத பாடங்களில் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 20 கேட்கப்படும். 20 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 2 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்படும். அதில் 7 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்படும். அதில் 7 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 7 கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
70 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். 15 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 2 மதிப்பெண் கேள்விகள் 9 கேட்கப்படும். அதில் 6 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 9 கேட்கப்படும். அதில் 6 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 5 கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
தொழிற்கல்வி பாடங்களில் 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வை பொறுத்தமட்டில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். 15 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அதேபோன்று 3 மதிப்பெண் கேள்விகள் 13 கேட்கப்படும். அதில் 10 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 7 கேட்கப்படும். அதில் 5 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். 10 மதிப்பெண் கேள்விகள் 2 கேட்கப்படும். 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்துத்தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும். செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் 70 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண் பெற வேண்டும். எழுத்துத்தேர்வு, அக மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும்.
மொழிப்பாடங்களில் தாள்-1, தாள்-2 ஆகிய இரண்டையும் சேர்த்து சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற வேண்டும். தொழிற்கல்வி செய்முறை பாடத்தை பொறுத்தமட்டில் 75 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 20 மதிப்பெண் பெற வேண்டும். அக மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெற வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.