சென்னை பெருநகர காவல் துறையில் புதிய புலன் விசாரணை பிரிவில் பணிபுரிய உள்ள போலீஸாருக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முக்கிய கொலை, கொள்ளை, மத, ஜாதிய ரீதியான மோதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகளில் விரைந்து விசாரணை செய்ய வசதியாக 12 மாவட்டங்களிலும் 12 புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட உள்ளது.
இந்தப் பிரிவில் பணிபுரிய உள்ள அதிகாரிகள், காவல்துறையினருக்கு 3 நாள் பயிற்சி முகாம் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் சட்ட வல்லுநர்கள், அரசு மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் துறை நிபுணர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
இந்த புலன் விசாரணை பிரிவு ஆக்ஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 12 மாவட்டங்களில் ஒரு ஆய்வாளர் தலைமையில் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மேற்பார்வையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“