போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திவரும் நிலையில், பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் வேலைக்கு செல்வோர், பேருந்துகளையும், புறநகர் மின்சார ரயில்களையுமே முழுவதுமாக நம்பியுள்ளனர். சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகரில் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, 113 தற்காலிக ஓட்டுனர்களையும், 64 தற்காலிக நடத்துனர்களையும் அதிகாரிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் தான் தற்காலிகமாக சென்னை மாநகரில் பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிகிறது. பேருந்தை இயக்கி காட்டியும், முறையான ஆவணங்களை சமர்பித்ததன் அடிப்படையிலும் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.